|
|
 |
|
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை சமாவர்த்தனம் என்ற நிகழ்ச்சியுடன் நேற்று திங்கட்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில் வட்டுக்கோட்டையிலுள்ள மணமகள் இல்லத்தில் சிவஜெயக்குருக்கள் தம்பதிகளின் திருமணம் சிறப்பாக இடம்பெற்றது.
நீர்வை அரசகேசரிப்பிள்ளையார் ஆலய ஸ்தானிக மரபைச் சார்ந்த சிவஜெயக்குருக்களின் திருமணத்தில் ஏராளமான அன்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர் பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
மாலை 3 மணிக்கு மணமகன் இல்லத்தில் கிருஹப்பிரவேசநிகழ்ச்சி நடந்தது. நீர்வேலியில் நடந்த இந்நிகழ்விலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் நான்கு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Posted on 07 Feb 2012 by Admin
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் திருக்குடமுழுக்குப் பெருவிழா (மகா கும்பாபிடேகம்) இன்று 06.02.2012 காலை 10.15 மணியளவில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இது மழை காலமாக இல்லாதிருந்த போதிலும் பிரதான கும்பம் வெளிவீதியில் பிரவேசித்த போது திடீரென வானத்திலிருந்து மழை பொழிந்தது. இது அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
நகுலேஸ்வரம், இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றாகும். 1991இல் ஆலயத்தின் மீது இடம்பெற்ற குண்டு வீச்சு மற்றும் மக்கள் இடப்பெயர்வுகளைத் தொடர்ந்து பூசை வழிபாடுகள் இடம்பெறாத ஆலயாக இருந்தது. மீண்டும் ஆலயப் பிரதம குரு நகுலேஸ்வரக் குருக்களது பெருமுயற்சியாலும் அடியவர்களது பெரும் பங்களிப்புக்களாலும் மீண்டும் பூசை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று திருக்குடமுழுக்குப் பெருவிழா இடம்பெற்றுள்ளது.
திருக்குடமுழுக்குப் பெருவிழாவுக்காக தமிழகத்தில் இருந்து திருத்தணி சுவாமிநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரி விரிவுரையாளர் திருஞான. பாலச்சந்திரன் ஆகிய ஓதுவார்கள் வருகை தந்திருந்தனர். இவர்களுடன் பழனி ஆதீனக் குரு முதல்வர் சீர்வளர்சீர் சாது. சண்முக அடிகளார், மரன்பாளையம் ஆதீனம் தவத்திரு சிவாச்சள் அடிகளார் ஆகியோரும் பல அந்தணோத்தமர்களும் வருகை தந்து கலந்து கொண்டனர். கும்பாபிடேகக் கிரியைகளை தமிழகத்தில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ. கல்யாணசுந்தரக் குருக்கள் நெறிப்படுத்தினார். இலங்கையின் சைவப் பெருமக்கள் பலரும் பக்தி பூர்வமாகக் கலங்து கொண்டு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப் பெருமானை வழிபாடாற்றினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Posted on 06 Feb 2012 by Admin
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் சிவாச்சாரியார் சிவஸ்ரீ சோ. சிவஜெயக்குருக்களின் திருமணவிழா இன்று 06.02.2012 இடம்பெற்றது. இன்று மாலை மணமகன் இல்லத்தில் இடம்பெற்ற வரவேற்பு உபசாரத்தின் போது அரசகேசரி விநாயக அடியவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக் கூறி மணமக்களிடம் ஆசிபெற்றனர். 
Posted on 06 Feb 2012 by Admin
ஞானச்சுடர் பதினைந்தாவது ஆண்டில் கால்பதித்த மலராக வெளிவந்துள்ளது. 65 பக்கங்களுடன் வழமையான அம்சங்களைத் தாங்கியவாறு மலர் வெளிவந்துள்ளது. இந்தத்தடவை சந்நிதியான் ஆச்சிரமத்தின் சேவைகள், பணிகளைக் குறிப்பிட்டுக்காட்டும் வகையில் சிறப்பு மலர் ஒன்றும் ஞானச்சுடர் இதழுடன் இலவசமாக வழங்கப்படுகின்றது.
Posted on 05 Feb 2012 by Admin
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்களின் புதல்வர் சிவஸ்ரீ சோ. சிவஜெயக் குருக்கள் வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணி சிவஸ்ரீ கணேசராஜக் குருக்களின் புதல்வி கணேசவேணியைத் திருமணம் செய்கிறார். இத்திருமண வைபவம் 06.02.2012 காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடையேயுள்ள சுபவேளையில் மணமகள் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நீர்வேலியில் வரவேற்பு இடம்பெறும். இது தொடர்பான அழைப்பு ஆலய அறிவித்தல் பலகையிலும் இடப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் வாழ்த்த விரும்புவோர் 0212230578 என்ற மணமகன் இல்லத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். இல்லற பந்தத்தில் இணையும் சிவஜெயக்குருக்கள் தம்பதியினரை நீர்வேலி இணையமும் வாழ்த்துகிறது.
Posted on 05 Feb 2012 by Admin
Posted on 05 Feb 2012 by Admin
பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தமூர்த்த்தி நாயனார் புராணம் பற்றிய கருத்தரங்கும் கருத்தாடலும் எதிர்வரும் 07.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வின் வரவேற்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் வழங்குவர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தின் கட்டமைப்பு என்ற பொருளில் பேராசிரியர் அ.சண்முகதாசும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் நாவற்குழி மகா வித்தியாலய ஆசிரியர் க.க. ஈஸ்வரனும் கருத்துரைகளை வழங்குவர். கருத்தரங்கைத் தொடர்ந்து கருத்தாடல் இடம்பெறும். இதன் இணைப்பாளர்கள்hக சொல்லின்;செல்வர் இரா.செல்வவடிவேல், சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் கு.பாலசண்முகன், மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியர் ந.சத்தியவேந்தன் ஆகியோர் பங்கேற்பர்.
இளைய தலைமுறையினரிடையே சமய நம்பிக்கைகளைக் கட்டி வளர்க்கும் நோக்குடனும் ஆய்வுப் பார்வையில் சமய இலக்கியங்களை அணுகும் முறைமையைப் பயிற்றுவிக்கும் எண்ணத்துடனும் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது எனவும் ஆர்வமுள்ள எவரும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறலாம் எனவும் இதன் ஏற்பாட்டாளர்களான பேராசிரியர் அ.சண்முகதாஸ், விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மண்டபத்திற்கான அனுசரணையை யாழ். மாநகரசபையின் கலாசாரப் பகுதியினரும் நிகழ்வுக்கான அனுசரணையை திருநெல்வேலிச் சந்தி பிரகாந்த் போட்டோ கொப்பி நிறுவனத்தினரும் வழங்கியுள்ளனர்.
Posted on 05 Feb 2012 by Admin
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகம் இடம்பெற்றமையை முன்னிட்டான மணவாளக் கோலத் திருவிழா எதிர்வரும் 11 ஆம்திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அம்பாள் பூந்தண்டிகையில் எழுந்தருளி வீதிவலம் வரும் நிகழ்வும் இடம்பெறும்.
Posted on 05 Feb 2012 by Admin
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்திற்காக அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் எதிர்வரும் 07 ஆம் திகதி தைப்பூச தினத்தன்று காலை 9 மணிக்கு கதவு நிலைவைப்புடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் தவத்திரு சாது சண்முக அடிகளார் மற்றும் மரன்பாளையம் ஆதீனம் திருநாவுக்கரசர் மடம் சீர்வளர்சீர் தவத்திரு சிவாச்சள் அடிகளார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் இலண்டன் நல்லை ஆதீனத் திருப்பணிக் குழுவினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இக்குழுவின் உறுப்பினர்களான திருப்பணிக்குழுத்தலைவர் சூ.பாலசிங்கம், உபதலைவர் எஸ்.ரி.எஸ். சோமசேகரம், பொருளாளர் வி.சிவசுந்தரம், உபசெயலாளர் என். சச்சிதானந்தன் மற்றுமு; கலாநிதி அ.தேவசகாயம் ஆகியோரும் லண்டனில் இருந்து நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளனர்.
Posted on 05 Feb 2012 by Admin
சிறுப்பிட்டி அ.த.க. பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டான வீதியோட்டம் 05.02.2012 காலை 6.30 மணிக்கு இடம்பெறும் எனவும் இதனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே. பாலசுப்பிரமணியம் ஆரம்பித்து வைப்பார் எனவும் அதிபர் நா.மகேந்திரராசா அறிவித்துள்ளார்.
Posted on 05 Feb 2012 by Admin
கடந்த சில நாட்களுக்கு முன் நீர்வேலி ஸ்ரீ கந்தஸ்வாமி ஆலயத்தில் இரவு வேளையில் உட்புகுந்த விஷமிகள் அங்கே கோயிலை மாசு படுத்தியிருந்தார்கள்.... இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்திருக்கிற சூழலில் இவை பற்றி கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை வலம்புரியில் எழுதப்பட்டிருந்த ஆசிரியத்தலையங்கம்.. ஒவ்வொரு ஹிந்துவும் கட்டாயம் படிக்க ... சிந்திக்க வேண்டியது...
இந்து சமயத்தை வேரறுக்க சதித்திட்டம் நடக்கிறது
இலங்கைத் தீவில் இந்து சமயம் சார்ந்த மக்கள் எந்தளவு தூரம் மனக்கஷ்டத்தை அனுப விக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்துக்கடவுள்களினதும் நிலையுள்ளது. யுத்தத்தின் போது ஏகப்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் ஒன்றிணைந்து ஆலயங்களைப் புனரமைத்து வழிபாடு நடத்தும் போது, திருட்டு என்ற பெயரில் விக்கிரகங்கள் உடைக்கப்படுகின்றன. பல இடங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதும் கடத்தப்படுவதும் நடந் தேறுகின்றன. நேற்று முன்தினம் இரவு வேளை நீர்வேலி கந்தசுவாமி கோவில் மூலஸ்தான விக்கிரகத்தை புரட்டி அங்கிருந்த இயந்திரத் தகடு திருடப்பட்டுள்ளது. இது போன்று இந்து ஆலயங்கள் பலவற்றில் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன.
நன்றி- வலம்புரி
Posted on 05 Feb 2012 by Admin
பசுமை அமைதி விருதுகள் பரிசளிப்பும் நங்கூரம் சமூக அறிவியல் ஏடு வெளியீடும் எதிர்வரும் 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி;க்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வடமாகாணம் தழுவிய சூழல்சார் பொது அறிவுப் பரீட்சை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கே பசுமை அமைதி விருதுகள் வழங்கப்படவுள்ளன. சமூக அறிவியல் ஏடான நங்கூரம் இருமாத இதழாக வெளியிடப்படவுள்ளதாகவும் இதன் ஆண்டு சந்தா தபாற் செலவுடன் ரூபா 500 எனவும் சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.
Posted on 02 Feb 2012 by Admin
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நாளும், தாமோதரன் சஞ்சிகை வெளியீடும் எதிர்வரும் 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார். நிறுவுநர் நினைவுப் பேருரையை யாயழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் வழங்குவார். தாமோதரன் சஞ்சிகைக்கான வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.அருந்தாகரன் வழங்குவார்.
Posted on 02 Feb 2012 by Admin
நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் மூலஸ்தானத்திற்குள் நேற்று இரவு (31.01.2012) புகுந்த சில விஷமிகள் ஆலய விக்கிரகங்ளைப் புரட்டி அதன் கீழே இருந்த தங்கத்தாலான இயந்திரத் தகடுகளைக் களவாடியுள்ளனர்.
இரவோடு இரவாக நீண்ட நேரம் தங்கியிருந்து இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது எனப் பலரும் கவலை தெரிவித்தனர். கந்தசுவாமி கோவிலில் நிகழ்ந்த இச்சம்பவம் முருகனது அடியவர்கள் மனதில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
Posted on 02 Feb 2012 by Admin
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவின் போது ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இன்றைய உதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. நீர்வை அன்பர்களுக்காக அதை மீளப் பிரசுரிக்கின்றோம். 
Posted on 02 Feb 2012 by Admin
இந்திய நடனத்தாரகை கலைமாமணி ரமா வைத்தியநாதனதும் அவரது புதல்வி குமாரி தக்ஷணா வைத்தியநாதனதும் நாட்டிய நிகழ்வு இன்று 31.01.2012 மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
கோப்பாய் ஆசிரிய கலைசாலை முத்தமிழ் மன்றத்தினதும் வீரகேசரி, யாழ் ஓசை பத்திரிகைகளை வெளியீடு செய்யும் எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர் நிறுவனத்தினதும் ஆதரவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்பம் முதல் நிறைவு வரை மண்டபம் முழுவதும் இரசிகர்களால் நிரம்பி வழிந்தது. சிறந்த ஒரு கலை நிகழ்வைத் தரிசித்த மகிழ்வில் பலரும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Posted on 31 Jan 2012 by Admin
நீர்வேலி வடக்கு கருணை மிகு காமாட்சியம்பாள் ஆலய அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்று 5ஆம் நாள் உற்சவத்தின் மாலை நிகழ்வில் இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலய பிரதான குருக்கள் தமிழகத்தைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ கைலை நாகநாதசிவம் அவர்கள் கலந்து வழிபாடாற்றியதுடன்... வேதபாராயணம் செய்தும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தியும் சிறப்பித்தார்கள்...
நகுலேஸ்வர மஹாகும்பாபிஷேகத்திற்காக வருகை தந்துள்ள சிவாச்சார்யார் அவர்களின் தீடீர் விஜயம் கோயில் சார் அன்பர்களைப் பெரு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிற்று.
தினமும் அம்பிகை அலங்காரபூஷிதையாக பல்வேறு வாகனங்களில் மங்கல இசை முழங்க வீதி வலம் வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது... இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்..

Posted on 31 Jan 2012 by Admin
நீர்வேலியில் வாழ்ந்து வரும் பிரபல நாடகக் கலைஞரும் அண்மையில் நீர்வைக் குரிசில் விருது வழங்கிக் கௌரவிக்ப்பட்டவருமான வே. சிதம்பரநாதன் 01.02.2012 இல் அகவை அறுபதை எய்துகின்றார். இசை நாடகம் கூத்து முதலிய கலைகளை வளர்ப்பதில் அரும்பாடுபடும் பொன்னார் அவர்களை இந்நாளில் வாழ்த்துவதில் நீர்வேலி இணையமும் மகிழ்வடைகின்றது.
பொன்னாரின் பிறந்ததினத்தை ஒட்டிக் குடும்பத்தினர் வழங்கிய வாழ்த்தும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பனிமேகம் பொழிந்திடும் மாசித் திங்களில் மாசற ஒளிவீசும் மாவையில் ஜனித்து நீர்வளம் பொழிந்திடும் நீர்வையில் இல்லிடம் அமைத்து செல்லிடம் எங்கும் இன்னிசையால் புகழ் சேர்த்து கண்ணான கணவனாய் அன்பான தந்தையாய் “யாழகம் ” தன்னில் “பொன்னார்” எனும் புனைபெயருடன் அயராது உழைத்து எம் வாழ்வில் ஏணியாய் இனிமையான இதயம் கொண்ட ஜயாவே! இவ் இனிய பிறந்த நாளில் இறைவனின் அருளால் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பொங்கி ஆரோக்கியம் நிலைத்து வசந்தங்கள் பல கண்டு ஆயுள் நீண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம் வாழ்க! வாழ்க! வாழ்க!
Posted on 31 Jan 2012 by Admin
நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் கலைவிழா 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வேளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அத்தியார் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரும் யாழ். வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய இ.குணநாதன் அவர்களும் அவரது துணைவியார் பங்கஜவல்லி குணநாதன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு மாத்திரமல்லாது நீர்வைக் கிராமத்தின் உயர்ச்சிக்காகவும் பல்வேறு சமூக நலப்பணிகளை வழங்கி வருகின்றமைக்காக இக்கௌரவம் வழங்கப்படுவதாக கௌரவிப்பு நிகழ்வை முன்னிலைப்படுத்திய விரிவுரையாளர் ச.லலீசன் குறிப்பிட்டார்.
முன்பள்ளித் தலைவர் ச.க. முருகையா மாலை சூட்டிக் கௌரவிக்க நீர்வைமணி கு.தியாகராசக் குருக்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். இதே போல் திருமதி பங்கஜவல்லி குணநாதனுக்கு சிவாஜினி செல்வநாயகம் மலர் மாலை அணிவிக்க சரஸ்வதி விக்னேஸ்வரன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். 
Posted on 30 Jan 2012 by Admin
நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதனும் திருமதி பங்கஜவல்லி குணநாதனும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முன்பள்ளி ஆசிரியைகள் செல்வி சிவாஜினி செல்வநாயகம், செல்வி தேவமதி ஜெயராசா, திருமதி கீர்த்திகா கஜன், திருமதி வேளினி கரன் ஆகியோர் பிரதம விருந்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Posted on 30 Jan 2012 by Admin
அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள் அதிபர் ச.வேலழகன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் கலந்து கொண்டார். சிவப்பு நிறத்தைக் கொண்ட மலைமகள் இல்லம் முதலிடத்தைப் பெற்றது.

Posted on 30 Jan 2012 by Admin
இப்போதெல்லாம் நம்மவர்களின் திருமண நடைமுறைகள் குறித்து நிறையவே பலரும் குறைப்பட்டுக் கொள்வதைக் கேட்கிறோம்..
படப்பிடிப்புக் கலாச்சாரம் புகுந்ததால்.. குருக்கள் சொல்வதைச் செய்வதற்கு திருமண தம்பதிகள் தயாரில்லை..
ஹோமப் புகை நிறைய வரக் கூடாது.. தோரணம் கட்டக் கூடாது.. இப்படி அதிக நிபந்தனைகள், ஒரு மணித்தியாலத்துக்குள் கிரியைகள் நடந்து முடிய வேண்டும்..
இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்த மாப்பிளைக்கு அன்றைக்கு இக்கிரியைகள் நடக்கிற போது கூட காலணி கழற்ற இயலாதாம்..
இப்படி நம்மவரின் திருமண நடைமுறைகள் வெறுப்பைத் தூண்டுவனவாய் அமைய இவற்றுக்கெல்லாம் மாறாக அற்புதமான ஒரு திருமணம் நேற்று வெள்ளிக்கிழமை நீர்வேலியில் நடைபெற்றிருக்கிறது.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” –குறள்
 நீர்வை. தி.மயூரகிரி சர்மா
Posted on 27 Jan 2012 by Admin
நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்தக் கலைவிழா 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்ரீ கணேசா சனசமூக நிலையத் தலைவர் ச.க. முருகையா தலைமையில் முன்பள்ளி முன்றிலில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர் செ. பத்மநாதன், நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன், அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் ச.வேலழகன், நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை அதிபர் சி.தர்மரத்தினம், கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய அதிபர் கு. வாகீசன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. பத்மகுமார், நீர்வேலி இ.த.க. பாடசாலை அதிபர் ம.சிவானந்தன், வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகப் பொறுப்பதிகாரி தி.திருமாலினி ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக கிராம அலுவலர் ச.சண்முகவடிவேல், வலி. கிழக்குப் பிரதேச சபையின் உப தவிசாளர் க. தர்மலிங்கம் (ச.நீ.) ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் வரவேற்புரையை முன்பள்ளி ஆசிரியர் திருமதி க. கீர்த்திகா வழங்குவார். ஆசியுரைகளை நீர்வைமணி சிவஸ்ரீ கு. தியாகராஜக் குருக்கள், அரசகேசரி பி;ள்ளையார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சா. சோமதேவக்குருக்கள்ஆகியோரும் நன்றியுரையை முன்பள்ளிச் செயலாளர் க.ந. ஜெயகிருஸ்ணன் (குட்டி) வழங்குவார்.
Posted on 27 Jan 2012 by Admin
நீர்வேலி சீ.சீ. தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி போதிக்கும் உமா ரீச்சரின் சங்கிலியை அபகரிப்பதற்கான முயற்சி நேற்று மாலை நீர்வேலி மத்தி சங்கக்கடைக்குச் சமீபமாக இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது - உமா ரீச்சர் பாடசாலை முடிந்த பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து வீடு செல்வது வழக்கம். இவ்வாறு நேற்றையதினம் 26.01.2012 சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் இவரைப் பார்த்துச் சிரித்தனர். சிறு வயதில் தன்னிடம் கல்வி கற்ற பிள்ளைகளாக இருக்குமோ என நினைத்த ஆசிரியையும் பதிலுக்குச் சிரித்தார். திடீரென அவரது கழுத்தில் பாய்ந்து சங்கிலியை அறுத்தனர்.
துவண்டுபோன ஆசிரியை அந்த இடத்தில் விழுந்துவிடச் சிறுவர்கள் கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு ஏனையவர்கள் ஓடிவர – திருடர்கள் மோட்டார் சைக்கிளில் ஓடி மறைந்தனர். பின்னர் அவ்விடத்தில் தேடிப்பார்த்தபோது அருகில் இருந்த சிறிய பற்றைக்குள் சங்கிலி விழுந்து கிடந்ததாகவும் மீண்டும் அது அவருக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Posted on 27 Jan 2012 by Admin
கொழும்புக்கம்பன்கழகத்தினால் இவ்வாண்டுக் கம்பன் விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் அமரர் துரை விஸ்வநாதன் நினைவு பேச்சுப் போட்டிகளும் , அமரர் பொன் பாலசுந்தரம் நினைவு கவிதைப் போட்டிகளும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் பத்திரிகைகள் மூலம் முன்னரே கோரப்பட்டிருந்தன. விண்ணப்பித்த போட்டியாளர்களுக்கான அனுமதியட்டைகள் போட்டியாளர்களின் முகவரிகளுக்கு தனித்தனி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள், அவ்வனுமதி அட்டைகளுடன் போட்டி மண்டபத்திற்குச் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். போட்டிகளுக்கு விண்ணப்பித்தோர் அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடினும் தக்க சான்றுகளுடன் நேரடியாகப் போட்டி மண்டபத்திற்கு வருகைதரலாம் எனக் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.
போட்டிகள் 02 பிரிவுகளாக இடம்பெறும். கீழ்ப்பிரிவுப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்டோரும், மேற்பிரிவுப் போட்டிகளில் 20 -35 வயதுக்குட்பட்டோரும் கலந்துகொள்ளலாம். பேச்சு மற்றும் கவிதை போட்டிக்கான தலைப்புகள் இலக்கியம், கலை, வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும் எனவும் தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கல பதக்கப் பரிசில்கள் வழங்கப்பெறும் எனவும் கொழும்புக் கம்பன்கழகம் அறிவித்துள்ளது. மேலும், போட்டிகளில் இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted on 27 Jan 2012 by Admin
வீரகேசரி பத்திரிகை நிறுவனம் (எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவட் லிமிட்டட்) வழங்கும் 'நாட்டியாஞ்சலி' பரத நாட்டிய நிகழ்வு இம்மாதம் 30 ஆம் திகதி மாலை 6.30 க்கு கொழும்பு பிஷப் கல்லூரி மண்டபத்திலும், 31 ஆம் திகதி மாலை 6.30 க்கு கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை முத்தமிழ் மன்ற ஆதரவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், எதிர்வரும் முதலாம் திகதி மாலை 4.30 க்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்திலும், 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மத்திய மாகாண இலங்கை - இந்திய கலாசார பேரவை (Kalyana SLICA) இணைந்து கண்டி இந்து கலாசார மண்டபத்திலும் இடம்பெறுகிறது.
இலங்கையில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில் கலைமாமணி ரமா வைத்தியநாதன் மற்றும் அவரது புதல்வி குமாரி தக்ஷ்ஷினா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகழ்பூத்த பரதநாட்டிய நடனக் கலைக் குடும்பத்தில் பிறந்தவரான குமாரி தக்ஷ்ஷினா வைத்தியநாதன், தனது பாட்டியான பத்மஸ்ரீ சரோஜா வைத்தியநாதன் மற்றும் அன்னையான கலைமாமணி ரமா வைத்தியநாதன் ஆகியோரை குருவாக ஏற்றதுடன், தனது சொந்த நாட்டியாலயமான கணேஷா நாட்டியப் பள்ளியில் இணைந்து பரதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர்.
குமாரி தக்ஷ்ஷினா வைத்தியநாதனுக்கு இந்திய அரசின் கலாசார திணைக்களத்தால் கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தகக்து. இவர் தனது 10 ஆவது வயது தொடக்கம் பாட்டியான பத்மஸ்ரீ சரோஜா வைத்தியநாதன் மற்றும் அன்னையான கலைமாமணி ரமா வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகள் பலவற்றில் நடைபெற்ற பல்வேறுபட்ட நடன நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் தனிப்பட்ட பல இந்திய, வெளிநாட்டு இளையோருக்கான நடன நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
நாட்டிய தாரகை ரமா வைத்தியநாதன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பரத நாட்டிய இசை நிகழ்ச்சிகளை உலகமெங்கும் திறம்பட நடத்தி வருகிறார். இவர் தனது ஆறாவது வயது தொடக்கம் பரதக் கலையை யாமினி கிருஷ்ணமூர்த்தியிடம் முறையாகக் கற்றுக் கொண்டவர். திருமணத்தின் பின்னர் தனது மாமியாரான பத்மஸ்ரீ சரோஜா வைத்தியநாதனை குருவாக ஏற்று பரதத்தை சிறப்பாகக் கற்றவர் இவர்.
பெண் வாரிசு இல்லாத குறையை தனது மாமியாருக்குத் தீர்த்து, தனது மாமியார் உருவாக்கிய கணேஷா நாட்டியப்பள்ளியில் ஓர் இயக்குநராகவும் தன்னை வளர்த்துக் கொண்டவர். நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி பத்திரிகையின் 75 ஆவது ஆண்டு விழாவுக்காக இவர் இலங்கைக்கு விஜயம் செய்து நடன நிகழ்வுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆண்டு வீரகேசரிப் பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு விழாவின்போது சிறப்பு நாட்டிய சங்கமம் எனும் தலைப்பில் நிகழ்வுகளைத் தலைநகர், ஹட்டன், மட்டக்களப்பு, மாத்தளை ஆகிய இடங்களிலும் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. இவர் வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
நாட்டியாஞ்சலி நடன நிகழ்வுகளில் கலைமாமணி ரமா வைத்தியநாதன், குமாரி தக்ஷ்ஷினா வைத்தியநாதன் ஆகியோருடன் சிவகுமார் காமேஸ்வரன் (நட்டுவாங்கம்), களப்புரைகல் அருண் குமார் (மிருதங்கம்), திருவிழா விஜு எஸ். ஆனந் (வயலின்), வித்யா ஸ்ரீனிவாசன் (வாய்ப்பாட்டு) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Posted on 27 Jan 2012 by Admin
யாழ். இந்துக் கல்லூரி மாணவனும் நீர்வேலி இணையக் குழுமத்தைச் சேர்ந்தவருமாகிய பூரணலிங்கம் யசிந்தன் றுவான்புர தேசிய கல்வியியற் கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்தில் ஆசிரியர் தரக் கற்கையை மேற்கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் அன்னதானச் சபையின் முக்கிய உறுப்பினராகவும் செயற்படும் யசிந்தன் நீர்வேலி இணையத்தின் ஊடாக உலகெங்கும் வாழும் உறவுகளுக்கு நீர்வேலி பற்றிய தகவல்களையும் படங்களையும் வழங்கி வருகின்றார். யசிந்தனின் உயர்கல்வி சிறக்கவும் நீர்வைக் கிராமத்திற்கு வளஞ்சேர்க்கவும் நீர்வை மண் உறவுகள் சார்பில் வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றோம்.
Posted on 26 Jan 2012 by Admin
நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியில் அமைந்துள்ள கருணை வளர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று வியாழக்கிழமை காலையில் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி திங்கட்கிழமை இவ்விழா நிறைவு பெறும்..
தினமும் காலையில் அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் இடம்பெறும். அத்துடன் மாலை வேளையில் அலங்கார பூஜையுடன் அம்பிகையின் திருவீதியுலாக் கோலாகலம் இடம்பெறும்..
Posted on 26 Jan 2012 by Admin
அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த மெய்வல்லுனர்ப் போட்டி

Posted on 26 Jan 2012 by Admin
நீர்வேலி தெற்கு கந்தசுவாமி கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ள பாலர் பகல் விடுதியை அபிவிருத்தி செய்வது தொடர்பான சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் குறித்த பாலர் பகல் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது.
அத்தியார் இந்துக் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் ஐ.சிவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீர்வேலி நலன்புரிச் சங்கம், ஐக்கிய இராச்சியம், தாய்ச் சங்கத்தின் செயலாளர் போ.செல்வநாதன் , மற்றும் உறுப்பினர் பு. சிவசுப்பிரமணியம், திருமதி.ப.சிவகுமார் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர். இன்னும், ஆர். அன்பானந்தர் உள்ளிட்ட பலரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதே போல கனடாவிலுள்ள நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி தேவா வரதராஜன், போன்ற பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு யாழ். கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் க.விமலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நீர்வேலியூரின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றிய இந்நிகழ்வில் இப்பாலர் பாடசாலையினதும் பகல் விடுதியினதும் முன்னேற்றம் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின் படங்களை இங்கு காணலாம்..

Photos- PPJ
Posted on 26 Jan 2012 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 Next >> |
|
|
|
|